பார்வையில்

தமிழீழ கடலில் உறுமி பன்னிரு வேங்கைகள்- 05.10.1987

தமிழீழ கடலில் உறுமிக் கொண்டு பயணித்த புலேந்திரன் , குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள் .

05.10.1987

ரகுவும் பழனியும் அலைகளை ஊடுருவி – இருளைத் துளைத்து – எப்போதும் பழக்கப்பட்ட தமது கண்களால் பார்த்தார்கள்…. சிறிலங்கா கடற்படைப் படகு அவர்களை நோக்கி மின் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது …….

 

‘கடற்புறாவை’ விரைவாக செலுத்த முயன்றார்கள் .

 

இயலவில்லை .

 

புலிகளின் விரைவுப் படகுகளில் ஒன்றல்ல ‘கடற்புறா’ என்பது அவர்களுக்குத் தெரியும் .

 

பருத்தித்துறைக் கடலில் மலைகளாய் எழுந்து அலைகள் வெறிக்கூத்தாடின.

 

பதினேழு விடுதலைப் புலிகள் ‘கடற்புறாவில்’ இருந்தார்கள்.

லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட……

 

நிலைமையைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது .

 

சிறிலங்கா அரசின் கொடுமைகள் சிறிதும் குறையவில்லை . வல்லாளுமையாளரின் வெறித்தனங்கள்…….

 

இந்தியாவும், சிறிலங்காவும் சேர்ந்து விரித்த வலை இறுக்கமாக இருந்தது.

 

பதினேழு விடுதலைப் புலிகளும் நடுக்கடலில் கைதாகி அன்றிரவு சிறிலங்கா கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டார்கள்.

 

பழனி எதிரியின் கப்பலில் இருந்து கொண்டே கடலைப் பார்த்தான் . பின்பு நீண்டகால நண்பன் ரகுவைப் பார்த்துச் சொன்னான்;

 

‘’ஆசையோடு நாம் விளையாடித் திரிந்த கடல்’’

 

முன்பொருநாள் –

 

சிங்கள சிறிலங்காப் படைகளை எதிர்த்து தமிழீழம் வீறு கொண்டு போராடிய காலம்.

 

27,10.1986 மாலை நான்கு மணி.


தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து பயிற்சி முடித்த விடுதலைப் புலிகளின் முதற் பெண்கள் படைப்பிரிவு, தமிழீழம் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

 

கழுத்துகளில் ‘சயனைட்’ மாலைகள் – சிரித்த கலகலப்பான பேச்சு – களம் பார்க்கும் தாகம் – பத்துப் பெண் விடுதலைப் புலிகள் படகில் உட்கார்ந்திருந்தார்கள்.

 

தமிழீழக் கரையில் அவர்களைச் சேர்க்கும் பொறுப்பு ரகுவப்பாவிடமும், பழனியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

 

படகைக் கடலில் தள்ளிவிட்டு எல்லோரையும் பார்த்து பழனி சொன்னான்:-

 

சிரிக்கிறீங்க…… ஒண்டு சொல்லுறன்…. ‘’வழியில சிலவேளை நேவிக் கப்பல் வரலாம்……. ‘’ஹெலி’’ துரத்தலாம் ……அசையாதீங்கோ ….. பதட்டத்திலை குப்பியைக் கடிச்சுப் போடாதேங்கோ …..”

 

உறுமிக் கொண்டு மின்விசைப்படகு கடலில் பாய்ந்தது.

 

பெண்களில் ஒருத்தி சொன்னாள் ;

 

‘’பயப்பிடாதைங்கோ எண்டு சொல்லி எங்களை அவமானப்படுத்திறீங்கள் பழனி அண்ணா!’’

 

பழனி தனக்குள் சிரித்துக்கொண்டான் . ரகுவப்பாவும் , பழநியும் வல்வெட்டித்துறையில் பேர் போன படகு ஓட்டிகள் …..உறுதி வாய்ந்த விடுதலைப் புலிகள்.

 

கடற்படை படகுகள் துரத்த – பலமுறைஅவர்கள் எதிரியின் கண்ணில் மண்ணைத்தூவி – கடலைக் கிழித்துப் பறந்திருக்கிறார்கள்.

 

பலதடவை கடற்போரில் அவர்கள் ஈடுபட வேண்டியிருந்தது . கடற்படையோடு எத்தனையோ முறை மோதியிருக்கிறார்கள். நாகர் கோவில் கடற்கரையில் சிறிலங்கா ‘ஹெலிகொப்டர்’ ஒன்றை அவர்கள் தாக்கி வீழ்த்திய போர் உணர்ச்சி மயமானது.

 

தமிழீழக் கடலலைகள் கொந்தளித்த வண்ணமே இருந்தன.

 

கப்பலிலிருந்து அடிக்கடி மத்தாப்புக்கள் வானத்தில் வெடிக்கப்படும் . கடலில் பெரிய வெளிச்சம் அடிக்கும் .படகுகள் பளிச்சென்று அடையாளம் காணப்படும் . படகை நோக்கி குண்டுகள் பறக்கும் ……

 

இந்தக் கடலில்தான் ரகுவப்பாவும் , பழநியும் விடுதலைப் புலிகளை ஏற்றி இறக்கினார்கள் . அவர்களுடைய படகோட்டம் விடுதலைப் புலிகளின் வீரம் நிறைந்த ஒரு பகுதியே ……

 

காரிருள் வானத்தை மூடத் தொடங்கிற்று . கடலும் வானமும் இருளாகிக் கொண்டு வந்தது. அவர்கள் இப்போது நடுக் கடலில் இருந்தார்கள் .


Leave A Comment