பார்வையில்

குப்பிக் கடித்த புலிப்பல். கவிஞர்.அறிவுமதி -1990-

குப்பிக் கடித்த புலிப்பல்.
குப்பிக் கடித்த மகனோடு
ஒரு
தாய்
பேசுகிறாள்–

குப்பி கடித்தாயாமே
மகனே!
கேள்விப்பட்டேன்.
விழிக் குடிசைகளின்
ரோமக் கூரைகளில்
உப்பு மழைத்துளிகள்
ஒழுக
ஒழுக
உனக்காக
அழவேண்டும் என்று
எதார்த்தம்
விரும்புகிறது
மகனே !

ஆனால்
உனது கனவுகள் வந்து
என் கண்ணீரைத்
துடைத்து விடுகின்றன.

இது உனக்கு
இறந்த நாளா?
இல்லை மகனே…

மரணம்
என்பது
உண்மையான வீரனுக்கு
இரண்டாவது
பிறந்த நாள்
ஆம்…
அவ்வளவுதான் மகனே !

உன்னைப்
பெற்றெடுத்த நாட்களில்
வளர்ந்து
ஆளாகி
உனது கைகளால்
ஒரு
பெண்ணின்
கழுத்தில் நீ
தாலி கட்ட
அதைப் பார்த்து மகிழ வேண்டும்
என்று
அம்மா நான்
ஆசைப்பட்டது
உண்மைதான்
மகனே !
உண்மைதான்.

ஆனாலும்
உனக்கு
நீயே
மரணத் தாலி
கட்டிக் கொண்டதைப்
பார்த்த
நாளில்
அதைவிடவும் அதிகமாய்
மகிழ்ந்தேன்
மகனே !
மகிழ்ந்தேன்.

...

நாட்டிற்குள்
பெருமாள்களாய்
வாழ்வதைக் காட்டிலும்

காட்டிற்குள்
பிரபாகரன்களாய்
கிட்டுகளாய்
வாழ்ந்து
போராடுகிறீர்கள்
என்பதில்தான்
மகனே
நான் இன்னும்
மகிழ்ந்தேன்.

ஆம்…
நாட்டிற்குள் தான்
வாழ்கிறேன்
ஆனால்
மிருகங்களுக்கு
மத்தியில்.

நீ
காட்டிற்குள்தான்
வாழ்ந்தாய்
ஆனால்
மனிதர்களுக்கு
மத்தியில்.

...

சிங்கப் பல்
தெரிய
நீ
சிரித்த
அழகையெல்லாம்
சேகரித்துப்
பார்க்கிறேன் மகனே…

அவற்றையெல்லாம் விட
அதே
சிங்கப் பல்
இன்று
சயனைட்
குப்பிகடித்து
புலிப் பல்லாக
மாறிப் போன
செய்தி
கேட்டு
குளிர்ந்தேன்.

எனது மார்புகளில்
பால்
குடித்த
நாட்களில்
முதல்
பல்லால் நீ
கடித்தபோது
ஏற்பட்ட
இன்ப
வேதனையை விடவும்

அதே
பல்லால் நீ
குப்பி
கடித்தாய் என்கிற
செய்தி கேட்டு
அடைந்த
துன்ப மகிழ்ச்சி
இனிமையானது
மகனே!
இனிமையானது !

...

விழுந்த பல்
முளைக்கவில்லை
என்று
உன் மாமன்
நெல்லால்
கீறிவிட்ட பொழுது
கசிந்த
இரத்தம் பார்த்து
என்
கண்கள்
பனித்தன மகனே!
கண்கள்
பனித்தன.

இன்று
குப்பி கடிக்க நீ
ரத்தம் கசிய
கண்கள் மூடினாய்
என்று
கேள்விப் படுகையில்
கண்களும்
சிரித்தன மகனே !
கண்களும்
சிரித்தன.

...

சின்ன வயதில்
நான் கொடுத்த
வெல்லக் கட்டிக்காக
போட்டி
போட்டுக்கொண்டு
நீயும்
உனது
தம்பிகளும்
காக்காய்க் கடி
கடித்துப்
பங்கிட்டுக் கொள்வதைப்
பார்த்து
மகிழ்ந்த உன் தாய்
மகனே…

இன்று
இயக்கம் தந்த
குப்பியை
நீயும்
உனது
தோழர்களும்
புலிக்கடி கடித்து
மரணத்தைப்
பங்கிட்டுக்
கொண்டதைக்
கேட்கக்
கேட்கக்
மகிழ்கிறேன்
மகனே !
மகிழ்கிறேன்.

...

பெற்றெடுத்த
மகன்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தமில்லை
மகனே.
ஈழவிடுதலையைப்
பெற்றெடுக்காமல்
இறந்துவிட்டாயே
என்கிற
வருத்தம்தான்
எனக்கு.
ஆனாலும்…

நம்பிய
தலைவனை
நம்பிய
இயக்கத்தைக்
காட்டிக்
கொடுக்கமாட்டேன்
என்கிற
உறுதியோடு
குப்பி கடித்த
என் செல்ல மகனே!

உன்னை
இழந்தாலும்
என்னை
அம்மா
அம்மா
என்றழைக்க
ஆயிரமாயிரம்
புலிகள்
அணிவகுத்துக் கொண்டே
இருக்கிறார்கள்
மகனே !

அவர்கள்
பெற்றுத்தரப் போகிற
தமிழீழத்தில்
சின்னஞ் சிறுசுகள்
நாளை
சிரிக்கிற போது…

குப்பி கடித்த
உனது பல் ஞாபகமாக
அன்று
கண்ணீர் வடிப்பேன் மகனே!
அன்று
வடிப்பேன்

ஆனந்தக் கண்ணீர்!
இனியும்
தமிழச்சிகள்
வீரர்களைப் பெற்றுத்தருகிற
வெறும்
கர்ப்ப இயந்திரங்களாக மட்டும்
இருக்க மாட்டார்கள்.

அவர்களே…
வீராங்கனைகளாக
மாறுவார்கள்.

மாறிக்கொண்டும்
இருக்கிறார்கள்.

ஆயுதங்கள்
ஏந்துவார்கள்.

ஏந்திக் கொண்டும்
இருக்கிறார்கள்..

-எழுதியவர் – கவிஞர்.அறிவுமதி
ஆண்டு – 1990-

Leave A Comment