படைத்துறைகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு


1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.

மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.

இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது. கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.

யுத்தத்தை எதிர்கொள்வதிலும் சண்டை செய்வதிலும் எல்லோரும் சம அளவில் உழைக்க வேண்டியிருக்கிறது. உடலளவிலும் மன அளவிலும் எல்லோருக்கும் ஒரேயளவு பலம் தேவைப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனினும் போர்க்களத்தில் அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களாற் சாதிக்க முடிந்தது. அதாவது ஆண்களைவிட அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம்.


ஜெயசிக்குறு ஓராண்டு வெற்றிநாளுக்கு களமுனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் படும் சிரமங்கள் தெரிந்தன. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஏறத்தாள ஒன்றரை வருடங்கள் நடை பெற்றது. அனைத்துக் கால நிலைகளிலும் சண்டை நடந்தது. மழைக்காலத்தில் பதுங்குகுழிகளுக்குள் வெள்ளம் நிற்கும். மழை பொழியப்பொழிய சண்டை நடக்கும். நெஞ்சளவு தண்ணீருக்குள் நாள் முழுவதும் நின்று சண்டைசெய்திருந்தார்கள். அனைத்துப் பதுங்குகுழிகளும் அவர்களே வெட்டினார்கள். ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது உடலுளைப்பு மிகமிகக் கடினமாயிருந்தது. பதுங்குகுழி அமைப்பதும் அணைகள் அமைப்பதும் காப்பரண்கள் அமைப்பதும் மிகக்கடுமையான வேலைகள். தமக்குரியஅனைத்து வேலைகளையும் அவர்களேதான் செய்தார்கள். பின்வாங்கி வரவர புதிய காப்பரண்கள் அமைக்கவேண்டும்.

தங்களுக்கான சகல நிர்வாக வேலைகளைக்கூட அவர்களேதான் செய்கிறார்கள். மருத்துவர்களாகவும் சாரதிகளாகவும் பெண்களே இருக்கிறார்கள். களமுனைக் கட்டளைத் தளபதிகளாகவும் அவர்கள் இருந்து வழிநடத்துகிறார்கள். எமது தமிழ்ச்சமூகத்தில் இது முக்கிய திருப்புமுனைதான். ஆனால் இம்மாற்றம் தனியே போராளிகளுக்கு மட்டும் பொருந்திப் போவதும் சமூகத்தில் இன்னும் பெரியளவு மாற்றம் வராததும் சாபக்கேடு.

முன்பு ஆண்போராளிகளின் அணிகளுடன் பெண்போராளின் அணிகளும் கலந்து தாக்குதல் மேற்கொண்ட நிலை, ஒரு கட்டத்தில் தனித்துத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது. முக்கிய மரபுவழி எதிர்ப்புச் சமர்களில் அவரவர் பகுதிகளை அவரவரே தனித்துப் பாதுகாத்துச் சண்டை செய்தனர். எதிரியின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட பெண்புலிகளால் தனித்துச் செய்யப்பட்டன. முக்கியமாக தரைக்கரும்புலித் தாக்குதல்கள் சில அவ்வாறு நிகழ்த்தப்பட்டன. இறுதியாக நடந்த தீச்சுவலை முறியடிப்புச் சமரில் பெண்புலிகளின் பங்களிப்பு அளப்பரியது. தளபதி கேணல் பால்ராஜின் கூற்றுப்படி, முறியடிப்புச் சமரிற் பங்குபற்றி அந்நடடிக்கையை முறயடித்தவர்கிளில் 60 வீதமானவர்கள் பெண்போராளிகளே.

இன்று தமக்கென சிறப்புப் படையணிகளையும் கனரக ஆயுதப்படையணிகளையும் கொண்டுள்ள மகளிர் படையணி, கடலிலும் தன் பங்கைச் சரிவரச் செய்துள்ளது. ஆட்லறிகள் வரை சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தும் மகளிர் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கத்தில் மருத்துவ உதவிகளாகவும், பரப்புரை மற்றும் வெளயீட்டு உதவிகளாகவுமிருந்த பெண்களின் பங்களிப்பு, 1985 இலிருந்து இராணுவப்பங்களிப்பாக பரிணமித்தது. இன்று தவிர்க்கவே முடியாதபடி அவர்களின் பங்களிப்பு எங்கும் எதிலும் வியாபித்துள்ளது.

1984 இன் ஆரம்பப்பகுதியில் முதன் முதலாக பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் மறைமுகமாக ஆதரவு நல்கத் தொடங்கியவர்கள் பின்பு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியுடன் ஆயுதப்பயிற்சி பெற்று இந்திய – தமிழீழப் போர் 1987 ஐப்பசி 10 இல் ஆரம்பமாகிய போது நேரடியாக யுத்தமுனைக்குச் சென்று பல வீர சாதனைகளை இன்றுவரை படைத்து வருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தெரிவிக்கையில், ‘எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழப் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறோம்.


தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து, எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்” என்றார்.

 தமிழீழப் பெண்கள்

எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய தெளிவான பார்வையும் போருக்குள் நின்ற வாழ்வனுபவமும் போர்க்கலை பற்றிய அறிவும் எமது போராளிகளது நுண்மையான மன உணர்வுகளை புரிந்துகொள்கின்ற தன்மையும் அவசியம். இல்லாது போனால் எமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக்கொள்வது கடினம்.

போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளது வரலாற்றை துல்லியமாகக் கிரகித்தறிவது சிரமம். எனவே போர்க்களத்தில் அளப் பெரும் தியாகங்களையும். சாதனை களையும் படைத்த பெண்போராளிகளே இப்பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாளாக என்னிடம் இருந்த பேரவா.

எனது பேரவாவுக்கு விருந்தளிக்கும் மாலதி படையணியின் வெளியீடாக நெஞ்சையுறைய வைக்கும் பல்வேறு சமர்களின் தொகுப்பாக பெண் போராளிகளது வீரத்தையும் விவேகத்தையும் பறைசாற்றும் வரலாற்றுப் பதிவேடாக இந்நூல் வெளிவருவது பெரும் மகிழ்வைத்தருகிறது.

உலகிலே சரிபாதியினர் பெண்கள். எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் எமது
போராட்டத்தில் பங்குபெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப் படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேச விடுதலையும் முழுமைபெறாது. ஆனால அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துக்கள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதிசமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையும் சாதியக் கட்டமைப்புக்களும் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுப்பப்பட்டிருந்தது. அது சுயசிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கின்றோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் எம்மண்ணில் என்றுமில்லாதவாறு தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்திப் பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே எமது விடுதலைப் போராட்டத்திற் பெண்களையும் அணி சேர்ப்பதனூடாக படிப்படியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும் தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என நான் உறுதியாக நம்பினேன். இவ்வாறு தான் எமது போராட்டத்திற் பெண்புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைபலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கின்றார்கள்.


ஒருநூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி புரட்சிகளை நடத்தி விவாதங்கள் புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றையும் விட எமது பெண்புலிகள் மிகவும் குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளும் சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றார்கள். சமூக கருத்துலகின் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும் பெண்ணும் சமமான ஆற்றலுடனேயே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உடற்கூற்றியல் நிபுணர்களின் கூற்றுக்கு பெண்புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கின்றார்கள்.

புரட்சிப் புலிகளாகக் களமிறங்கியுள்ள எமது பெண்புலிகள் எத்தகைய துன்பங்களையும் சுமந்து எத்தகைய நெருக்கடிகளைம்; சமாளித்து எத்தகைய ஆபத்துக்களையும் எதிர்கொண்டு போராடுகிறார்கள். அசைக்கமுடியாத மனவுறுதியும் அதனால் பிறக்கும் துணிவும் அவர்களிடம் உள்ளன. அபாரமான சகிப்புத்தன்மையும் தளராத உறுதியும் கடும் உழைப்பும் கொண்டவர்கள் அவர்கள்.

அவர்கள் தரையில் மட்டுமல்லாது கடலிலும் சண்டை செய்கிறார்கள். கடற்போர்க்கலை மிகவும் நுட்பமானது. அதற்கு நிறையப்பயிற்சியும் அனுபவமும் தேவை. கடல் சதா அசைந்து கொண்டிருக்கும். அதன் முதுகில் சவாரிசெய்து கொண்டு சண்டை யிடுவது மிகவும் கடினமானது. எமது பெண்புலிகள் மீன்குஞ்சுகள் போலக் கடலோடு வாழப் பழகி விட்டார்கள்.

இந்தப் பெண் போராளிகளை அவர்களது போராட்ட வாழ்க்கையை அவர்களிடையே நிலவும் ஆழமான புரிந்துணர்வை அளவிட முடியாத அன்புறவை இந்நூல் அழகு தமிழில் எளிய நடையில் மிக நுட்பமாக வெளிப்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கூடாக மாலதி படையணியின் வரலாறு சொல்லப்படும் பாங்கு சிறப்பாக அமைகிறது. மேலும் பெண்புலிகளது போரனுபவத்தை மாலதி படையணியின் சண்டையனுபவத்துடன் பின்னிப் பிணைத்து பெண்புலிகளது வரலாறு இந்நூலில் அழகாகப்படைக்கப்பட்டிருக்கிது. இந்நூலின் ஆக்கத்துக்கு அயராது உழைத்த மாலதிபடையணிப் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு இந்நூல் சிறப்புடன் வெளிவர எனது நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– விழுதுமாகி வேருமாகி ” நூலில் தேசியததலைவரின் வாழ்த்திலிருந்து …

 பங்குனி 8 பெண்கள் தினம்

அனைத்துலக பெண்கள் தினமான பங்குனி 8, 1992 இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில், ‘பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம்.

எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற என்ற குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டம். இந்தச் சிந்தாந்தப் போராட்டம் ஆண்களின் மனவுலக மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Comment