பார்வையில்

மாமனிதர் தராகி -சிவராம். 29.04.2005

இலங்கை அரசியலில் தமிழர் தலை விதியை எதிர்வு கூறிய சிவராமின் தீர்க்க தரிசனம்


உலகின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எவ்வளவு தூரம் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றதோ அதேயளவு பங்கினை தனிமனித ஊடகவியலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 


மனித சமூகத்தின் அரசியல், பொருளியல், சமூகவியல் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்களின் பங்கு அபரிமிதமானது.நம் சமூக மாற்றத்திற்கும், அரசியற்சிந்தனை மாற்றத்தினை சமூகத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற அல்லது சொல்லுகின்ற பேராசான்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர்.


சமூகமாற்றத்தினை வேண்டி நிற்கின்ற சமுதாயங்களுக்கும் இனக்குழுமங்களுக்கும் புதிய அறிவியல், அரசியற் சிந்தனைகளை வழங்குகின்ற ஊடகவியலாளர்களை அரசியல் மாற்றத்தை விரும்பாத எதேச்ச அதிகார அரசுகள் அடக்குகின்றன, அடக்கி ஒடுக்க முனைகின்றன. 


அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடக்குகின்றன. உலகின் அரசியற், சமூக பொருளாதார மாற்றத்தினை வேண்டிநிற்கின்ற நாடுகளில், அல்லது சமூகங்களில் ஊடக அடக்குமுறையில் முன்னணியில் திகழும் பர்மா, கெயிற்றி, ஈரான், ரஷ்யா சீனா. நேபாளம். இந்தியா. வங்காளதேசம். சேமாலியா போன்ற 16 நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தை வகிக்கின்றது.


இலங்கையில் கடந்த ஐம்பது வருடகால வரலாற்றில் இன முரண்பாட்டையும், சமூகவியல் மாற்றத்தினையும் ஏற்படுத்த முனைந்த பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர். அல்லது கொலைமிரட்டல் விடுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டனர். 


கடந்த 10 ஆண்டுகளுக்குள் 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து ஊடக அடக்குமுறையின் குரூரம் புரியும். இவ்வாறான ஒரு நெருக்கடி மிகுந்த இனவிடுதலைக்கான சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் உண்மையின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நீண்ட வரிசையில் டி.சிவராம் தனித்துவமானவர்.


தமிழரின் நோக்குநிலையில் இருந்து இலங்கையின் அரசியல். சமூக விவகாரங்களையும். அன்றாடச் செய்திகளையும். ஆங்கில மொழிமூலம் வழங்கும் ‘தமிழ்நெற்’ இணையத்தளம் உலகப்பிரசித்தமானது. 


இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு இராசதந்திரிகளின் அலுவலக மேசைகளில் அதன் நாளாந்த கணனிப் பிரதிகள் எப்போதும் இருக்குமளவிற்கு செய்திகளின் உண்மைத்தன்மையும் நேர்த்தியும் செய்தி ஆய்வுகளும் தரம்வாய்ந்தவை இத்தகைய சர்வதேச தரத்திற்கும் கீர்த்திக்கும் காரணம் அவ் இணையத்தளத்திரனை உருவாக்கி வழிநடத்தியது டி.சிவராம் தான்.


சிவராம் பத்திரிகைத்துறை ஜாம்பவான். இனப்பற்றும், நேர்மையும், துணிச்சலும் மிக்க ஊடகவாதி ஆங்கிலம் தமிழ் இரு மொழிகனிலும் அறிவுசார் புலமையுள்ள ஒரு அரசியல். இராணுவ ஆய்வாளன். புத்திஜீவிகள் வியக்கும் வண்ணம் இலாவகமான பொருட்செறிவுடைய சொல்லாடல்களை பயன்படுத்தி அலாதியாக அவருடைய பேனா ஆய்வுக்கட்டுரைகளை வரையும் தர்கரீதியானதும், வாசிப்போரின் அறிவியல் தேடலுக்கு நல்ல தீனியாகவும் அதேநேரம் மனதைக்கவர்ந்து பதியும் வண்ணம் மாக்சீயக் கருத்துக்கள் அவருடைய ஆய்வுக்கட்டுரைகளில் பலமாகவும், ஆழமாகவும் பொதிந்து கிடக்கும். 


தமிழர் தாயகத்தின் புவியியல் கேந்திரத்தன்மை பிராந்திய வல்லாதிக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு என்பவற்றை போரியல் இராணுவ நோக்கில் தர்க்கீகமாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அவர் எழுதும் இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை பாமரமக்கள் முதல் சிங்கள புத்திஜீவிகள் வரை ஏன் இராணுவத்தளபதிகளும் ஆர்வமாகப் படித்தனர். அவரது நடுநிலமையானதும் ஜதார்த்த பூர்வமானதுமான இராணுவ ஆய்வுகளிலிருந்து படைத்தரப்பு தமது போரியல் வியூகங்களை வகுக்க முற்பட்டது.


டி.சிவராம் என்ற சொல்லின் பின்னால் உண்மை, நேர்மை, நட்பு, துல்லியம், தர்க்கீகம் மாக்சீசம் தீர்க்கதரிசனம் எனப்பல்வகைப் பண்பும் பல்துறை ஆற்றலும் விரிந்துகிடக்கின்றது. ஒப்பாரும் மிக்காருமில்லாத தனித்துவமான, உலகமே வியந்து அந்த ஊடகப் போராளியை, அரசியற் சிந்தனையாளனை, மானிட நேயவாதியை நாட்டுப்பற்றளனை விடுதலைவிரும்பியை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மானசீகக் குருவை காலனிடம் பறிகொடுத்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் அந்த மாமனிதனின் வெற்றிடத்தை நிறப்புவதற்கு ஈழத்தாய் இன்னொரு பிரசவம் செய்யவேண்டும். இந்த நூற்றாண்டிலாவது முடியுமா என்றால் இல்லவே இல்லை. சிவராமுக்கு நிகர் சிவராம் தான் வேறு யாராலும் முடியாது.


ஆகவே இவ்வகைப்பட்ட கிடைத்தற்கரிய ஊடகவியலாளனின் வாழ்வும் வளமும் பற்றி என் சிறிய மனக்கண்ணில் விரிந்தவைகள். தர்மரட்ணம் சிவராம் 11.08.1959 இல் தமிழர் தாயகத்தில் கிழக்கில் உதித்த சூரியன். சென்.மிசேல் கல்லூரியில் கல்விகற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானவர். 1982 இல் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அன்றைய நாளில் வடகிழக்கில் இளைஞர் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, இன முரண்பாட்டின் தீவிரம், கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறையின் கொடூரம் என்பனவற்றினால் தமிழ் இளைஞர்கள் போராட்ட இயக்கங்களின் பால் சென்றபோது டி.சிவராமும் அந்த இளைஞர்களில் ஒருவராக இருந்தார். 


காந்தீயம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்திருந்த டி.சிவராம். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாமல் தமிழர் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் அமைப்புக்களில் தமிழீழ விடுதலைக்கழக அமைப்பில் (புளொட்) இணைந்து தனது தாயகத்திற்கான பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். 


வடக்குக் கிழக்கின் மூலை முடுக்குக் கிராமங்கள் முதல் காடுகள், மலைகள் ஈறாக கால்நடையாகவும், உந்துருளியிலும், ஈருருளியிலும் அலைந்து திரிந்து மக்களைச் சந்தித்தவர். அவர் சென்ற இடமெல்லாம் அப்பிரதேசத்தின் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள், பொருளாதார வளங்கள், புவியியல் நிலமைகள், இராணுவக் கேந்திரத்தன்மை என்பவற்றினை மிக ஆழமாக்க் கிரகித்துக் கொண்டவர். இதனால் தான் பின்நாளில் அவரால் பத்திரிகைத்துறையில் ஜாம்பவானாக விளங்கமுடிந்தது.


1980களின் நடுப்பகுதியில் விடுதலைக்காகப் போராடிய விடுதலை அமைப்புக்கள் வழி தவறிப்போக விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த முனைந்த விடுதலைப்புலிகள் இயக்கம். அவ்வாறு வழிதவறிப் போனவர்களை தமிழர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தடைசெய்தனர். எஞ்சியவர்களை தம்முள் உள்வாங்கிக் கொண்டனர். 


இவ்வாறு தடைசெய்யப்பட்ட புளொட் அமைப்பில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான பொறுப்பாளர்களில் ஒருவராகவிருந்த டி.சிவராம். அதிகார பூர்வமாக புளொட் இயக்கம் தனது அரசியற் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் நிறுத்துவதாக பிரகடணப்படுத்தும் அறிவித்தலை ஈழநாடு பத்திரிகைமூலம் வழங்கிவிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


பின்னர் தனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நண்பர்களின் உதவியோடு கொழும்பில் வசித்துவந்தாலும் புளொட் இயக்கத்திலிருந்து விலகாமலும், அதே நேரம் இலங்கையின் முக்கிய சிங்கள அரசியல் வாதிகளுடனும், கல்வி மான்களுடனும் தொடர்புகளைப் பேணி வந்ததார்.


1987 இல் நடந்த இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் அப்போது புளொட்டின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களால் புளொட் அமைப்பின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் புளொட் அமைப்பு மேற்கொண்ட மாலைதீவு ஆட்சிக்கவிட்பு, ஜே.வி.பி உடனான தொடர்பு, புளொட் அமைப்பின் கொள்கை விலகல், அமைப்பின் நிர்வாக ஒழுக்கச் சீர்கேடுகள் காரணமாக முற்றுமுழுதாக புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். உண்மையான ஒரு விடுதலை இயக்கம் அயல் நாடொன்றின் ஆட்சிக்கவிழ்பு சதி புரட்சிக்கு கூலிப்படையாகச் செல்லாது. அவ்வாறு செல்லின் அதை ஒரு விடுதலை இயக்கமாக்க் கொள்ளமுடியாது. என்பது அவருடைய கருத்து.


செப்டெம்பர் 8 1988 இல் ஜோகரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதோடு மானிட விடுதலை பற்றிய சிந்தனையோட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். இதிலிருந்து அவருடைய ஊடகப்பயணம் ஆரம்பமாயிற்று. இவருடைய பல்துறை அறிவியல் ஆற்றலைக்கண்டு வியந்த. இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான ரிச்சட். டி. சொய்சா. 


இவரை காமினி வீரக்கோனுடைய ஆங்கிலப்பத்திரிகையான ஐலண்ட பத்திரிகைக்கு கட்டுரைகளை எழுதும்படி வேண்ட தராக்கி என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். இவ்வாறு பத்திரிகைத் துறையுள் நுழைந்த சிவராம் குஞ்சி, சிவா, SR, தராக்கி, பொன்னம்பலம். ஞானசோதி எனப் பலபெயர்களில் ஊடகங்களில் வலம்வந்தார்.


இவருடைய அரசியல், இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் ஐலண்ட் பத்திரிகையிலும், வீரகேசரி வார இதழிலும், ஈழநாடு, ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்தன. இவருடைய தர்க்க ரீதியானதும். அறிவியல் சார்ந்த்தும், விஞ்ஞான பூர்வமுமான ஆய்வுக்கட்டுரைகள் இலங்கையில் புத்திஜீவிகளை மாத்திரமல்ல உலகின் ஊடகத்துறை சார்ந்தவர்களையும், கல்விமான்களையும் வெகுவாகக் கவர்ந்தது. 


இவ்வாறு பரிணமித்த சிவராம் என்ற பத்திரிகையாளன் 1990 களில் மனித உரிமை அமைப்புக்களினதும், அரசுசார்பற்ற நிறுவனங்களினதும் திட்டமிடல்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்கும் அளவிற்று அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தார். 


இவருடைய ஆங்கிலப்பத்திரிகை ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்ற பெயரில் நூலுருவில் வெளியிடப்பட்டு வடகிழக்கெங்கும் ஆர்வமாகப் படிக்கப்பட்டது. இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ளும் போதெல்லாம் அந்நாடுகளின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமிழர் தரப்பு நியாயங்களை அறிவுபூர்வமாகவும், யதார்த்தபூர்வமாகவும் நிறுவி புதிய கருத்துருவாக்கத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியவர். இதன்மூலம் அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் நம்பிக்கைக்குரியவரானார். இவருடைய கருத்துக்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு வெறுமதி வாய்ந்தவை.


சிங்களத் தலைவர்கள் மத்தியிலும், சிங்களப் பத்திரிகைக் குழாம், சிங்களப் புத்தி ஜீவிகளுடனும் மிக நெருங்கிய தொடர்பைப் பேணியதோடு அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகி கருத்துப் போர்களில் ஈடுபட்டு அவர்கள் யாவர் மத்தியிலும் புரையோடிக்கிடந்த பேரினவாத உணர்வுகளை கண்டு அவர்களுடன் விவாதித்து புதிய கருத்துப் பரிமாறலை ஏற்படுத்தும் கருத்தியல்ப் போர் புரிந்தும் அவர்கள் கேளாச் செவியர்களாகவும், அறிவுக்குருடர்களாகவும் இருப்பதையும் மாறாத உளப்பாங்குடைய இன வெறியர்களாக வளர்க்கப்பட்ட பௌத்தமத பீடங்களின் போக்கினை கண்டு மனம் நொந்ததன் வெளிப்பாடுதான் 


போர்நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழர் பிரச்சனையை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க சிங்கள வானொலிச் சேவையை ஆரம்பித்தபோது 3.10 2004 இல் இதே வீரகேசரி வார வெளியீட்டில் “தமிழர் பிரச்சினையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயன்ற்ற செயல்” என்ற தலைப்பில் தனது 15 வருடகால தென்னிலங்கை கல்விமான்களோடும், கருத்தியலாளர்களோடும் கொண்டிருந்த உறவின் மூலம் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை சிங்கள தேசம் தாம் விரும்பியதை மட்டுமே கேட்கத் தயாராக இருக்கின்றது என்பதை மிகச்சலிப்புடனேயே வெளிப்படுத்தியிருந்தார்.


சிவராமின் அரசியற் பார்வையில் ஏற்பட்ட இந்த மாற்றம் பேரினவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது அவருக்குத் தொல்லைகள் அதிகரித்தன. 


கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இருந்தும் அஞ்சா நெஞ்சுடன் அவருடைய ஆக்கங்களில் தமிழர் அரசியலின் அடிநாதமாக தமிழ்த்தேசியம் இருக்கவேண்டும் என உறுதிபட எழுதுவார். தமிழ்மக்கள் தேசிய விழிப்புணர்வுடன் இருந்து தென்னிலங்கை அரசியற் காய்நகர்த்தல்களை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறுவார். 


தமிழர் மத்தியில் பிரதேசவாத்த்தினை தூசுதட்டி எடுத்த கிழக்கு பிரிவிணை வாதிகளுக்கு எதிராக வீரகேசரி இதழிலேயே “கருணாவுக்கு ஒரு பகிரங்க மடல்” என்ற சிறந்த கடித்த்தின்மூலம் வரலாற்று ரீதியாக பிரதேசவாதம் பேசியவர்களின் வீழ்ச்சியும், அன்றைய அரசியல், புவியியல், இராணுவச் சூழலுக்கு கிழக்குப் பிராந்ந்தியம் எவ்வகையில் ஈடுகொடுக்க முடியும் என்றவகையிலான அவருடைய ஆழமான கருத்தியல் பிரதேச வாதத்திற்கு ஆப்புவைத்து சில வாரங்களிலேயே பிரதேசவாதிகளை சிங்களத்தின் கால்களில் தஞ்சமடைய வைத்தது. 


இது தமிழர் தாயகத்தின் கருத்தியலில் அவருடைய மேலாண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.


டி.சிவராம் அவர்களின் ஆக்கங்களிலே என்றும் அழியாப்புகழைத் தேடித்தந்த ஆக்கங்களாக “இந்தியக் கடற்பாதுகாப்பு வலையத்தில் இலங்கை”, “இந்து சமுத்திர வல்லாதிக்கப்போட்டியில் தமிழீழம்”, “தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முயல்வது பயன்ற்ற செயல்” “கருணாவுக்கு ஓர் திறந்த மடல்” என்பவை அவருடைய பத்திரிகைத்துறை முதிர்ச்சியின் சிறந்த வெளிப்பாடுகள். சிங்களத்தின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தி டி.சிவராம் பயன்படுத்தும் கடும் தொனி நிறைந்த சொல்லாடல்கள் இனவாத முகத்திரையை கிழித்தெறிவதுடன் தமிழ் மக்களிடம் விளிப்புணர்வை வேண்டிநிற்கும். 


தமிழரின் இனப்பிரச்சனைக்கு சிங்கள தேசம் ஒருபோதும் அரசியற்தீர்வை வழங்க முன்வர மாட்டாது என்பதை அவரது இறுதிக்காலத்தில் அழுத்திம் திருத்தமாக எழுதிவந்தார். அவருடைய தீர்க்கதரிசணக் கருத்துக்கள் தற்போதும் பொருந்தி நிற்கின்றன. முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் நடந்து ஒரு வருடமாகியும் தீர்வுத்திட்டமென்ற பொதி மாயமாக மறைந்திருக்க உலகிற்கு அரசியல் நாடக சித்துவிளையாட்டுத் தொடர்கிறது.


தற்போதைய அரசியற் சூழலில் விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவுக்குப் பின்பும் உருப்படியான அரசியற்தீர்வு யோசனைகள் கூட முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு தமிழர் தரப்பு அரசியற் தீர்வுத்திட்டம் கேட்பினும் அதனைச் செவிமடுக்க சிங்களதேசம் தயாரில்லை. இதனை ஆறு வருடங்களுக்கு முன்பே டி.சிவராமால் அனுமானிக்க முடிந்ததென்றால் அது அவருடைய ஆளுமை வீச்சின் கனதியை உலகுக்குப் புரியவைக்கும்.


இவ்வாறு பத்திரிகைத்துறையில் பல்வகைத்தன்மை கொண்டவராக விளங்கிய சிவராம் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்கின்றது என்பதனை வரலாற்று, அறிவியல், புள்ளிவிபரவியல்த் தரவுகளோடு வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளை அவருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது அசாத்தியத் துணிவுடன் “இந்த மண்ணை விட்டு நான் எங்கே போவது. சாவு வருவதெனில் இந்த மண்ணிலேயே எனக்கு நிகழட்டும்” என்று உறுதிபடக்கூறி சாவின் விளிம்பில் நின்றுகொண்டும் 


தனது பேனாவினால் புதிய சரித்திரமொன்றை படைத்துக் கொண்டிந்த அந்த மானிட நேயவாதியை பேரினவாத்த்தின் கொலைக்கரங்களும், தமிழினத்தின் கோடாரிக்காம்புகளும் சேர்ந்து கோழைத்தனமாக கடத்திச் சென்று கொடூரமாகக் கொன்று அவரது உடலை தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க ஆணையிடும் அந்த அதிகாரச்சின்னமான பாராளுமன்றத்தின் அருகே போட்டுவிட்டுச் சென்றனர்.


தமிழரின் விடுதலைப்போராட்ட கருத்தியல் வரலாற்றில் சிவராமுக்கு தனியிடமுண்டு. அவரின் மகத்தான ஊடகப்பணியைக் கௌரவித்து தமிழர் தேசம் மாமனிதராக போற்றுகின்றது. இவ்வாறே அமெரிக்காவின் கிளாக் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி யூட் பெர்ணாண்டோ அவர்கள் “சிவராமின் இழப்பு மனித நேய அமைப்புக்களுக்கும், கல்விசார் துறையினருக்கும், ஊடகத்துறையினருக்கும், பதிலீடு செய்யமுடியாத இழப்பு” எனக்குறிப்பிட்டதிலிருந்து அந்த மாமனிதனின் கருத்தியல் பரிமானத்தை உலகமே வியந்து நின்றது எனலாம்.


தி.திபாகரன்


Leave A Comment