பார்வையில்

பூக்களுக்குள் எழுந்த புயல் கரும்புலி மேஜர் சிறிவாணி...05.07.2000

பூக்களுக்குள் எழுந்த புயல் கரும்புலி மேஜர் சிறிவாணி...

05.07.2000


தென் தமிழீழத்தில் தமது படைதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு , காடுகள் , மலைகள் , ஆறுகளையெல்லாம் போடி நடையாகக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த அந்த அணியில் அவளும் வந்திருந்தாள். அப்போது அவளை அவர்கள் ” வண்டு ” என்றுதான் கூப்பிடுவார்கள். நாமும் அப்படியே கூப்பிடத் தொடங்கினோம்.


கட்டையான , உருளையான அவளின் தோற்றம் ஏறக்குறைய ஒரு வண்டி ஒத்திருந்ததுதான். அவள் கைகளை விடுக்கியவாறு நடக்கும் போது வண்டு உருளுவது போன்ற தோற்றமே பலருக்குத் தெரியும். 


வரும்போதே S84 வகை சூடுகலனுக்கு T56-2 வகை சூடுகலனின் அடிப்பாகத்தைப் பொருத்திச் செய்யப்பட்ட உயரம் குறைந்த சூடுகளைனை அவள் வைத்திருந்தாள். அவளுடைய உயரத்துக்கு அதுவே சரியாக இருந்தது. நீண்ட நாட்கள் வரை தனது சூடுகலனை அவள் கைமாற விடவில்லை.


வந்த சில நாட்களிலேயே மகளிர் படையணியினரின் இரண்டாவது வேவு அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட வண்டு , ” தவளை நடவடிக்கை ” முடிந்தபின் பூநகரிப் படைத்தளம் மீதான வேவு நடவடிக்கையில் பங்கேற்றாள். மகளிர் படையணியிலும் , பின்னர் அது 2ம் லெப் மாலதி படையணியாகத் தோற்றம் பெற்ற போதும் அவள் ஒரு வேவுப் போராளியாகவே களங்கள் எங்கும் உலாவினாள்.


இப்போது சிறீலங்கா படையினரின் சூரியக்கதிர் – 01 படை நடவடிக்கையால் வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்துவிட்டிருந்தனர். இரண்டாவது படை நடவடிக்கை இன்னமும் ஆரம்பமாகவில்லை. வேவு அணிகள் யாவும் தென்மராட்சியையும் வலிகாமத்தையும் , வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கின்ற வெளிகளில் உலாவிக்கொண்டிருந்தன.


லெப் கேணல் மைதிலியின் நேரடி வழிநடத்தலில் இப்போது அவள் ஒரு தேர்ந்த வேவுப்புலி. படையினருக்கு கண்ணிவெடி வைக்கும் திட்டமொன்றை எமது கண்ணிவெடி அணியினர் தீட்ட , வண்டு என்று எங்களால் அழைக்கப்படும் சிறீவாணி , அவர்களுக்கு வேவு பார்க்கப் புறப்பட்டாள்.


பரந்த வெளியிலே மேற்கொள்ளப்பட்ட கடினமான வேவு நடவடிக்கையின் முடிவில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு வல்வைப்பாலத்தடி. மிகச் சவாலான இலக்கு. சவாலை எதிர்கொள்ள அவர்கள் தயாராகினர்.


நிலவற இரவு நாட்களில் கூட நிழலுருவாக அவர்களைப் படையினர் இனங்காணத்தக்க பகுதியில் சிறீவாணியும் ஏனைய வேவு வீராங்கனைகளும் காப்பு வழங்க , எமது கண்ணிவெடி அணியினர் துரித கதியில் பணிமுடிக்க , இருளோடு இருளாக எல்லோரும் நழுவி வந்துவிட்டனர்.


இரண்டு நாட்களின் பின் , 1996 சித்திரை புதுவருடப் பிறப்பன்று இவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் , உலாவந்த இராணுவக் காவலுலா அணியில் மூவர் தூக்கி விசிறப்பட்டு விழ , எஞ்சிய ஒரு படைவீரன் தவழ்ந்தபடி தப்பி ஓடுவதை தொலை நோக்கியால் எம்மவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.


எப்பக்கத்தில் நின்று பார்த்தாலும் எவ்வளவோ தொலைவுக்கப்பால் வருபவர்களையே இனங்காணத்தக்க அப்பரந்த வெளியில் கிடந்த பாலத்தை புலிகள் நெருங்கி வந்துபோனது படைத்தரப்புக்குப் பலத்த அதிர்ச்சியாய் இருந்தது.


ஆனால் சிறீவாணிக்கோ  அது சின்ன விடயம். எப்போதும் சவாலை எதிர்கொள்வது ஒரு விளையாட்டுப்போல.  அதனால்தான் அவள் கரும்புலியாகி காற்றோடு கலந்தாளோ…?


– மலைமகள்.

   விடுதலைப்புலிகள் இதழ் 2004



            “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Leave A Comment