பார்வையில்

கல்லறைகளை சிதைத்தாலும் எம் மனங்களில் வாழ்வார் மாவீரர்.

தமிழ் மக்களை அவமதிப்பதன் பெயரால் அம்மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அடையாளமே தெரியாமல் சிங்கள இராணுவம் அடியோடு சிதைத்துள்ளது.

யேசு கிறிஸ்துவின் குருதியினால் கிறிஸ்தவம் எழுதப்பட்டது. உலகின் நாலாபுறங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால மாவீரர்களின் கல்லறைகள் விடுதலையின் கருவறைகளாக உள்ளன. சுதந்திர சிந்தனையின் தந்தையான சோக்கிரட்டிஸை கிரேக்க அரசு நஞ்சூட்டிக் கல்லறைக்குள் மூடியது.

ஆனால் இன்று கிரேக்கத்தின் புகழ் சோக்கிரட்டிஸ் என்ற பெயரில்தான் தங்கி நிற்கிறது. கிரேக்க அரசு சோக்கிரட்டிஸின் உயிரைப் பறித்தாலும் சோக்கிரட்டிஸ் என்ற பெயரை உச்சரிக்காமல் கிரேக்கத்துக்கு உயிர் மூச்சு இல்லை என்ற நிலைக்கு வரலாறு வழிசமைத்துள்ளது.

எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் போர்க் குரல் எழும், போராட்டம் தோன்றும். விடுதலைக்காக மாண்ட மக்களினதும் உயிர்நீத்த தியாகிகளினதும் எலும்புக் கூடுகளே வரலாற்றின் முதுகெலும்பாய் உள்ளன. சந்திரனில் நின்று பூமியைப் பார்க்கும்போது மனிதன் பூமியில் படைத்த படைப்பாக கண்ணுக்குத் தோன்றுவது சீனப் பெருஞ்சுவர் மட்டுமே.

பகைமையின் சின்னமான சீனப் பெருஞ்சுவரே மனிதனின் படைப்பாய் சந்திரனில் நிற்கத் தெரிகிறது என்பது ஒரு வேதனையான உண்மைதான். இவ்வாறே விடுதலை வேண்டிநின்ற தியாகிகளின் எலும்புக் கூடுகளைப் பூமியில் குவித்தால் அது சீனப் பெருஞ்சுவரை விடவும் பன்மடங்கு பெரிதாய் சந்திரனில் நின்று பார்க்கக் காட்சியளிக்கும்.

ஈழத்தமிழரின் உரிமைக்காக மாண்ட மக்களினதும் மாவீரர்களினதும் எலும்புக்கூடுகள் எல்லாம் இத்தகைய குவியலில் ஒரு பங்கே. ஈழத்தமிழரின் போராட்டம் என்பது உலகளாவிய அர்த்தத்தில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே. உலகளாவிய தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே. அனைத்து வகையான இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தினதும் ஒரு பகுதியே.

1956-ம் ஆண்டு கல்லோயாவில் சிங்களக் காடையரால் 156 தமிழர்கள் கொல்லப்பட்டதில் இருந்து தமிழ் மக்களின் இரத்தம் உரிமையின் பெயரால் இலங்கையின் வரலாற்றில் சிந்தப்படத் தொடங்கியது. இதற்கு முன் சிங்கள இனவாதம் 1915-ம் ஆண்டு முஸ்லீம் மக்களின் இரத்தத்தைக் குடித்தது. அதற்கும் முன்பு 1883-ம் ஆண்டு பௌத்த சிங்கள இனவாதம் முதன்முறையாக சிங்களக் கிறிஸ்தவர்களின் இரத்தத்தைக் குடிப்பதில் தன் இனவாத வரலாற்றை ஆரம்பித்தது. 1958, 1977, 1979, 1983 எனப் பல்வேறு ஆண்டு காலங்களில் தமிழரின் இரத்தத்தை அரச அனுசரணையுடன் சிங்களக் காடையர்கள் பன்முறை பருகி மகிழ்ந்தனர். இறுதியாக அரச இராணுவம் முள்ளிவாய்க்காலில் 80000-ம் தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்துள்ளது.

தமிழ் மக்களின் பாதுகாவலர் யார்? மக்கள் தமது பாதுகாப்புக்காக தமது பிள்ளைகளை எதிர்பார்த்தனர். அரசின் பார்வையில் அப்பிள்ளைகள் பயங்கரவாதிகள். ஆனால் தமிழ் மக்களின் பார்வையில் அவர்கள் பாதுகாப்பாளரும், விடுதலை வீரர்களுமாவர். இவர்களை உற்பத்தி செய்தது சிங்கள இன ஒடுக்குமுறைதான். நன் நோக்கங்களுக்காகவே அவர்கள் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்ய முன்வந்தனர். இதில் பல்வேறு இயக்கங்கள் தோன்றியிருக்கலாம். இதில் மாண்டுபோன அனைவரும் மாவீரர்களே.

தமிழ் மக்களின் மனங்களில் மாவீரர்களின் தோற்றம் ஒரு புனிதமான தேவையின் வெளிப்பாடாகும். அது ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும். ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடாதவன் வரலாற்றின் பக்கங்களை நிரப்புவதில்லை. இந்தவகையில் ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து மடியும் ஒவ்வொருவரும் மாவீரர்களே ஆவர். இந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும்தான் தமிழ் மக்கள் தம் உரிமையைப் பிரசவிக்க விரும்பினர்.

தமிழ் மக்களை அவமதிப்பதன் பெயரால் அம்மாவீரர்களின் துயிலும் இல்லங்களை அடையாளமே தெரியாமல் சிங்கள இராணுவம் அடியோடு சிதைத்துள்ளது. சோக்கிரட்டிசுக்கு மரணதண்டனை விதிக்க முன் அவரைப் பார்த்து குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோரினால் உயிர்ப்பிச்சை அளிக்கலாம் என பிரதம நீதிபதி கூறியபோது, அவரைப் பார்த்து சோக்கிரட்டிஸ் பின்வருமாறு கூறினார். ‘என்னைப் புதைத்து என் கருத்தை வாழவிடுவதா? அல்லது என் கருத்தைப் புதைத்து என்னை வாழவிடுவதா?’ என்ற உங்களின் கேள்விக்கான எனது பதில் ‘என்னைப் புதையுங்கள் என்கருத்து வாழட்டும்’ என்பதே. இங்கு மாவீரர்களின் தோற்றப்பாடான கல்லறைகளை சிங்கள இராணுவத்தால் உடைக்க முடிந்தாலும் மக்களின் இதயங்களில் இருந்து அவர்களை அழிக்க முடியாது.

மேலும் கல்லறைகளை அழித்தமை மக்களின் இதயங்களில் மாறா வடுவாய் பதிந்து விட்டது. எதிரி ஒன்றை அழிக்க நினைத்து மேலும் ஒன்றை அதனோடு சேர்த்து மக்களின் இதயங்களில் ஆழ வேரூன்றி உள்ளான். மனிதனின் அகவெளிப் பண்பாட்டின் தோற்றம் உடலங்களைப் புதைப்பதிலும் அவற்றை மலர்களால் அர்ச்சிப்பதிலிருந்துமே ஆரம்பமானது. வழிபாடு, ஆன்மீகம் என்பவற்றிற்கான தோற்றமும் புதைகுழிகளை அர்ச்சிப்பதிலிருந்தே ஆரம்பமானது. காலத்தால் முற்பட்ட மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட முதலாவது புதைகுழியாக 40ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட நிலையிலான புதைகுழி ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதைகுழிகளை கிளறி அழிக்கும் அநாகரிகத்தை சிங்கள இராணுவம் தமிழ் மண்ணில் அரங்கேற்றி உள்ளது. தம்பிள்ளைகளை நினைவு கூரும் உரிமையும் விளக்கேற்றி மனவமைதி அடையும் மிக அடிப்படையான மனிதவுரிமையும் தமிழ்ப் பெற்றோருக்கும் மாவீரர்களின் உறவினர்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஓர் ஆவேசமாக உருத்திரண்டு சுதந்திர உணர்வை மக்களிடம் மேலும் வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

நினைவுத் தீபங்களுக்கு எண்ணை ஊற்றுவதை தடுக்கும் அரசின் செயலானது மக்களின் சுதந்திர உணர்வுக்கு எண்ணை ஊற்றும் செயலாகவே அமையும். எதிரி நினைப்பதற்கு எதிர்மறை விளைவிலே இது சென்று முடியும்.

ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கான வரலாறு குறைந்த பட்சம் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த நீண்ட வரலாற்றில் உயிர் நீத்த தியாகிகளும், களத்தில் உயிர்நீராத் தியாகிகளும் என நீண்டபெரும் பட்டியலுண்டு. சுமாராக ஒரு நூற்றாண்டைக் கொண்ட இவ் நீண்ட வரலாற்றில் சங்கர் வீரச் சாவடைந்த தினமான நவம்பர் 27-ம் நாள் மாவீரர்களின் வரலாற்றில் ஒரு குறியீட்டு நாளாக உள்ளது.

உடலங்ககளைத் தகனம் செய்யும் இந்துப் பாரம்பரியத்தை அதிகமாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அதற்கு மாறாக மாவீரர்களைப் பூசிக்கவும் நினைவைப் பேணிக் கல்லறை அமைக்கவும் ஏற்றதாய் வித்துடலைப் புதைக்கும் முறைமை தமிழீழப் போராட்டத்தில் உதயமானது. ஆரம்பத்தில் தகனம் செய்யும் முறையே இருந்தாலும் பின்பு படிப்படியாக ஆங்காங்கே புதைக்கும் முறை உருவாகி இறுதியில் மாவீரர் துயிலும் இல்லங்கள் 1990களின் ஆரம்பத்தில் தோன்றின.

துயிலும் இல்லங்கள் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் மட்டுமன்றி தமிழ் நெஞ்சங்களில் அவை வழிபாட்டுக்குரிய இடங்களாகவே புனிதம் பெற்றுள்ளன. இந்தப் புனிதத்துவத்தை மக்களின் நெஞ்சங்களில் இருந்தும் வரலாற்றின் பக்கங்களில் இருந்தம் எத்தகைய புள்டோசர்களாலும் அகற்றிட முடியாது.

நாடுகடந்து, கண்டங்கள் கடந்து, ஆண்டுகள் கடந்து ஈழத் தமிழர் தமக்கான விடுதலையின் பெயரால் மாவீரர்களுக்கான ஒரு தினத்தை ஸ்தாபித்து விட்டார்கள். இது யாராலும் அழிக்க முடியாத ஒரு வரலாற்றுப் பக்கமாகிவிட்டது. ஜனவரி முதல் நாள் புதுவருட தினமென்று இருப்பது போல, நவம்பர் 27 என்றால் அது மாவீரர்களின் தினம் என கருவறை நீங்கிய பாலகனிலிருந்து புதைகுழி காணும் முதியோர் வரை தமிழ் கூறும் நல்லுலகின் நெஞ்சங்களில் பதிந்துவிட்டது. இது விடுதலை ஒளியை ஏந்தி நிற்கும் நாள்.

விடுதலைக்கான பாதையில் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஒரு ஒளிவீச்சென்றால் முள்ளிவாய்க்கால் படுகொலைப் புதைகுழிகள் விடுதலைக்கான சங்கோசையாகும். இவை ஒளியும் ஓசையுமாய் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

இரத்தத்தாலும், வியர்வையாலும், மூளையின் நரம்பு நாளங்களாலும், இதயத் துடிப்பின் ஓசையினாலும் மனித வரலாற்றின் வளர்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களே இதில் உங்களுக்குரிய இடம் வரலாற்றின் வளர்ச்சிப் பக்கங்களில் புனிதமாய்ப் பேணப்படும்.

மாவீரர்கள் நினைவிலிருந்து.!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Comment